மண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவளிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை மத்திய தேர்தல் குழுவிடம் தெரிவித்துள்ளேன். எனினும், இதுகுறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும் என்றார் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.
பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்-கர்நாடகப் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மாலகா ரெட்டி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய எடியூரப்பா, "யாதகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 6 முறை வென்றவர், அமைச்சராக இருமுறை பதவிவகித்தவர் மாலகாரெட்டி. இவர், பாஜகவில் இணைந்துள்ளதால் ஹைதராபாத்-கர்நாடகப் பகுதியில் கட்சி பலம்பெறும். இது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். அப்பகுதியில் பாஜகவை வளர்ப்பதற்கு மாலகாரெட்டியின் வருகை ஊக்கமளிக்கும்.
கலபுர்கி தொகுதியில் பாஜக வேட்பாளராக உமேஷ்ஜாதவ் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இவரது வெற்றி உறுதியாகியிருந்தாலும், மாலகா ரெட்டியின் வருகை வாக்குவித்தியாசத்தை அதிகரிக்கும். மாலகா ரெட்டியை தொடர்ந்து மேலும்பல தலைவர்கள் பாஜகவில் இணையவிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, தென் பெங்களூரு தொகுதியில் இருந்து போட்டியிடப்போவதாக வெளியான செய்தி பொய்யானது. தென் பெங்களூரு தொகுதி உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெகுவிரைவில் வெளியாகும்.
மண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவளிக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும். இதை பாஜக மத்திய தேர்தல் குழுவிடம் தெரிவித்துள்ளேன். எனினும், இதுகுறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். கர்நாடகத்தில் 22 மக்களவைத் தொகுதிகளை பாஜக எளிதில் வெல்லும். மஜத-காங்கிரஸ் கட்சியினரின் இடையே காணப்படும் நம்பிக்கையின்மைதான் பாஜகவுக்கு சாதகமாக அமையவிருக்கிறது என்றார்.