ராம்நகர் ஊரக காவல் சரகத்தில் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராம்நகர் மாவட்டம், யாரேஹள்ளியைச் சேர்ந்தவர் புட்டராஜ் (45). இவரை புதன்கிழமை இரவு யாரோ தலை மீது கல்லைபோட்டு கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிந்த ராம்நகர் ஊரக போலீஸார், யாரேஹள்ளியைச் சேர்ந்த மனுகெளடா (32), முத்துராஜ் (35), ராம்நகரைச் சேர்ந்த பரத் (25) ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் புட்டராஜிடம் மனுகெளடா கடன் வாங்கியிருந்தாராம். கடனுக்கு அதிக அளவில் வட்டி வசூல் செய்து வ்ந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனுகெளடா, தனது கூட்டாளிகளுடன் இணைந்து புட்டராஜை கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும், போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.