மஜத சித்தராமையா வளர்த்த கிளி அல்ல; மஜததான் சித்தராமையா போன்ற ஏராளமான கிளிகளை வளர்த்துவிட்டுள்ளது. தற்போது அக் கிளிகள் மஜதவுக்கு எதிராக கூவி வருகின்றன என்றார் முன்னாள் முதல்வர் குமாரசாமி.
முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் மஜத குறித்து சித்தராமையா விமர்சித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து குமாராசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
மஜதவையும், என்னையும் கிளி என்று நம்பி வளர்த்ததாகவும், அதனை தங்களை கழுகாக மாறி கொத்திவிட்டதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார். நான் சித்தராமையா வளர்த்த கிளி இல்லை. என்னை ராம்நகர் மாவட்ட மக்கள் கிளியாக பாவித்து வளர்த்துள்ளனர். சித்தராமையா என்னை வளர்க்கவில்லை.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, சித்தராமையா போன்ற கிளிகளை ஏராளமாக வளர்த்துள்ளார். தற்போது அந்த கிளிகள் மஜதவிற்கு எதிராக கூவி வருகின்றன. நான் சித்தராமையாவால் முதல்வர் ஆகவில்லை. காங்கிரஸ் கட்சியின் மேலிடம் எடுத்த முடிவால் நான் முதல்வரானேன். இதனை சித்தராமையாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் கூட்டணி அரசை கவிழ்க்க அவர் முயற்சி மேற்கொண்டார். மஜத மாநில கட்சியாக உறுதியாக வளர்ந்துள்ளது. ஆனால், சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அதன் புகழை பயன்படுத்திக் கொண்டு வளர்ந்துள்ளார். அவர் தனது பலத்தை காண்பிக்க நினைத்தால், புதியக் கட்சியை தொடங்கி, அதன்மூலம் நிரூபிக்கட்டும்.
இடைத் தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் புதிய அரசியல் நாடகங்கள் அரங்கேற உள்ளது. 15 தொகுதிகளுக்கும் மஜத வேட்பாளர்கள் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படுவார்கள். 15 தொகுதிகளிலும் மஜத வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் நடத்த தடை வாங்கப்படும் என்று கூறுவதில் உண்மையில்லை என்றார்.