வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து, பெலகாவியில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு தலைமை வகித்து சித்தராமையா பேசியது:
கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு 50 நாள்களாகியும், மத்திய அரசு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.
ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள நிவாரண உதவிகளை வழங்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. கர்நாடகத்திலிருந்து மத்திய அரசுக்கு பல கோடி மதிப்பில் வரி செலுத்தப்படுகிறது. அதிலிருந்து நமக்கு நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு யோசிப்பது முறையல்ல. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதியை விரைந்து ஒதுக்க வேண்டும் என்றார்.
போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே, லட்சுமி ஹெப்பல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.