குடியரசுத் தலைவர், பிரதமர் பதவியை ஒருமுறைக்கு மேல் யாரும் வகிக்கக் கூடாது என்று, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் எஸ்.மோகன்குமார் தெரிவித்தார்.
மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தமிழரான எஸ்.மோகன்குமார் போட்டியிடுகிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி வகிக்கும் பதவிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றார்.
இது குறித்து எஸ்.மோகன்குமார் மேலும் கூறியது: அரசியலமைப்புச் சட்டத்தின்படி வகிக்கும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், துணை பிரதமர், மத்திய அமைச்சர் போன்ற பதவிகளை ஒருமுறைக்கு மேல் யாரும் வகிக்கக்கூடாது. அதேபோல, மாநில முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் போன்ற பதவிகளை இருமுறைக்கு மேல் யாரும் வகிக்கக் கூடாது.
இந்த சீர்த்திருத்தங்களை கொண்டுவர குரல் கொடுப்பேன். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு தொகுதிகளுக்கு மேல் யாரும் போட்டியிடக் கூடாது போன்ற தேர்தல் சீர்த்திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.
பின்வாசல் வழியாக அதிகாரத்தை அனுபவிக்க இது பயன்படுவதால், மத்தியில் மாநிலங்களவை, மாநிலத்தில் சட்டமேலவையை ஒழிக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஒருகட்சி வெற்றிபெறாவிட்டால், மறுதேர்தல் நடத்தவேண்டும். அப்போதுதான் கட்சித் தாவும் மிகவும் மோசமான அரசியல் சூழ்நிலை மாறும். இது போன்ற மாற்றங்களை நமது நாட்டில் கொண்டு வந்தால் தான் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.
12 - ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு கட்டாய தொழில்கல்வி அளிக்க வேண்டும். இலவச சுகாதாரக் காப்பீடு அளிக்க வேண்டும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தைக் கட்டாயமாக அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும். பெண்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். அனைவருக்கும் உணவு தானியங்களை விநியோகம் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தரமான கல்வி வழங்கவேண்டும் என்று குரல் கொடுப்பேன் என்றார்.