கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் பாஜக அரசு நீடிக்காது என்று சட்டப் பேரவை முன்னாள் தலைவர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
கோலாரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: எந்தக் கட்சி ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதை அறுதியிட்டு கூற முடியாது. அப்படி எந்த ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவும் முடியாது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
அரசியல் பதவி என்பது நிரந்தரமானது கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது அரசியல்வாதிகள் செய்யும் தன்னலமற்றப் பணிகள்தான் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். கர்நாடகத்தில் பாஜக அரசு எத்தனை நாள்களுக்கு ஆட்சியில் நீடிக்கும் என்பதை கூற முடியாது.
கிடைத்திருக்கும் முதல்வர் பதவியை வைத்துகொண்டு, மக்களுக்கு எடியூரப்பா நல்லது செய்ய வேண்டும். அவசியம் இல்லாமல், எதற்காக எடியூரப்பாவை விமர்சிக்கவேண்டும். மக்களுக்கு நல்லது செய்தாலே போதுமானது. பேரவைத் தலைவர் பதவியில் இருந்து விலகியவுடன், மீண்டும் காங்கிரஸில் இணைந்துகொண்டேன். எனவே, காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்.
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுமா அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது குறித்து கட்சியின் மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும். எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட சீனிவாஸ்புரா தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபடுவதே லட்சியம் ஆகும். அரசியல்வாதிகளை விமர்சிக்கும் கடைசி மனிதனாக இருப்பேன். மனச்சாட்சியின்படியே செயல்பட்டுள்ளேன், எதிர்காலத்திலும் செயல்படுவேன் என்றார் ரமேஷ்குமார்.