தனது 2 மகள்களுடன் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஸ்ரீநகர் காலப்பா லேஅவுட்டைச் சேர்ந்தவர் சித்தய்யா (48). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களது மகள்கள் மானசா (17), பூமிகா (15). மானசா பியூசியும், பூமிகா எஸ்.எஸ்.எல்.சி.யும் படித்து வந்தனர். மின்சார வாரிய அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சித்தையா, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
இதனால் மனம் வருந்திய நிலையில் இருந்த ராஜேஸ்வரி, மகள்கள் மானசா, பூமிகா ஆகியோர், போலீஸாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடிதத்தில் தங்களது தற்கொலைக்கு காரணம் சித்தய்யா என எழுதி வைத்துள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரியின் சகோதரர் புருஷோத்தம் அளித்த புகாரின் பேரில் ஹனுமந்தநகர் போலீஸார் வழக்குப் பதிந்து, சித்தய்யாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.