கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டை சேர்ந்தவர் பரத் (25). கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவர், ரெளடிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். கடந்த ஆக. 8-ஆம் நந்தினி லேஅவுட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு லக்கெரே மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மஞ்சுநாத் என்பவரை வழிமறித்த பரத், ரொக்கப்பணம், செல்லிடப்பேசி, மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றார்.
இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிந்த நந்தினிலேஅவுட் போலீஸார், பரத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் குரகுண்டே பாளையாவில் பரத் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார், அவரை பிடிக்க முயன்றனர்.
அப்போது, காவலர் உமேஷை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்றாராம். இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளர் லட்சுமண் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால், பரத்தின் காலில் சுட்டுள்ளார். இதில் காயமடைந்து கீழே விழுந்த அவரை போலீஸார் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.