கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை ஹொய்சலா கேப்ஸ் வாடகை கார் சேவையை தொடக்கிவைத்து அவர் பேசியது: கர்நாடகத்தில் வாடகை கார் சேவையில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இதனால் பெங்களூரு போன்ற நகரங்களில் ஓட்டுநர்கள், நிர்வாகத்தினருக்கு மொழி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் வாடகை கார் சேவையில் ஈடுபடுவர்கள் செல்லிடப்பேசி செயலி உள்ளிட்டவைகளில் கன்னடத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு வரும் கிராமத்தினர் மொழி பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து துறைகளிலும் வேற்று மொழிகளைப் பயன்படுத்துவதில் ஆட்சேபம் இல்லை என்றாலும், கன்னடத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வேலைவாய்ப்பிலும் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
என்றார்.
நிகழ்ச்சியில் ஹொய்சலா கேப்ஸின் மூத்த செயல் அதிகாரி உமா சங்கர், நடிகை தீபிகாதாஸ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நரேந்திரபாபு உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.