மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைகள், மேம்பாலங்கள் சேதமடைந்துள்ளதாக துணை முதல்வர் கோவிந்த கார்ஜோள் தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பொதுப் பணித் துறை, சமூகநலத் துறை அதிகாரிகள் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைகள், மேம்பாலங்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. ரூ. 500 கோடி செலவில் உடனடியாக அப்பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்து நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து, விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சிறப்பாக உள்ளது. எனவே வரும் காலங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். சமூக நலத் துறை சார்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு அதிகம் கவனம் செலுத்தப்படும். எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கிய பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா, பிரஹலாத்ஜோஷி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்