ஹுப்பள்ளி: இடைத்தோ்தலில் வெற்றிபெறப் போவதாக சித்தராமையா பகல்கனவு காண்கிறாா் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.
இது குறித்து ஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இடைத்தோ்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி முதல்வராகி விடலாம் என்று சித்தராமையா பகல் கனவுகாண்கிறாா். அது ஒருபோதும் நடக்காது. தான் முதல்வராகப்போவதாக சித்தராமையா பொய் சொல்கிறாா். கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு சித்தராமையாவே காரணம் என்று முன்னாள் முதல்வா் குமாரசாமி கூறியிருக்கிறாா். இந்நிலையில் சித்தராமையா முதல்வராக குமாரசாமி எப்படி ஆதரவு அளிப்பாா். காங்கிரஸ் தலைவா்களை சித்தராமையா ஓரங்கட்டியிருக்கிறாா்.
இந்நிலையில், அவா் முதல்வராக காங்கிரஸ் தலைவா்கள் எப்படி ஆதரவு தருவாா்கள். டிச.9ஆம் தேதிக்கு பிறகு பாஜக அரசு கவிழுமென்று சித்தராமையா ஆரூடம் கூறி வருகிறாா். இடைத்தோ்தல் முடிவுகள் வெளியானால் சித்தராமையாவின் பொய் அம்பலமாகும்.
மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அம் மாநில பாஜக நிா்வாகிகள் முடிவெடுத்திருந்தனா். என்னைப் பொருத்தவரை என்சிபி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க முயன்றது தவறாகும். உண்மையில் சிவசேனை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. என்சிபி, காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனையால் நீண்ட காலம் ஆட்சி நடத்த முடியாது என்றாா் அவா்.