பெங்களூரில் அடுமனை தொழில்முனைப்பாற்றல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தேசிய திறன் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தேசிய திறன் வளர்ச்சிக் கழகம் சார்பில், பெங்களூரு, ஜாலஹள்ளி சந்திப்பு, எச் ஏஎஸ் ஆர்கேட்ஸ் சாலை, 2-ஆவது மாடியில் உள்ள டாலர் அகாதெமி ஃபார் ஸ்கில் அண்ட் என்டர்பிரெனஷிப் மையத்தில் இம்மாத இறுதியில் 2 மாதங்களுக்கு அடுமனை தொழில்முனைப்பாற்றல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இந்த பயிற்சியில் சேர 18 முதல் 35 வயதுக்குள்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகள், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், விதவைகள், விவசாயிகளுக்கு 50 வயது வரை சிறப்பு சலுகை வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் சொந்தமாக அடுமனை தொழில் தொடங்க பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின்கீழ் கடனுதவி பெறுவது குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படும். இப்பயிற்சி பெற விரும்புவோரிடம் இருந்து பிப். 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 080-41688560, 9008575588 ஆகிய எண்களில் அணுகலாம்.