கேரளத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கேரள மாநிலத்தின் சுற்றுலா பிரசார நிகழ்ச்சியில் அவர் பேசியது: இறைவனின் சொர்க்கபூமியாக திகழும் கேரள மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் கவரும் இடங்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் கேரள மாநிலத்துக்கு வந்து செல்லும் வகையில் 4 விமான நிலையங்கள்
உள்ளன.
கர்நாடகத்தின் அருகில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. கேரள மாநிலத்தின் சிறப்பு வாய்ந்த நிஷாகந்தி நடனம் திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் திரளாக சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்ள வேண்டும். சுற்றுலாவுக்காக கேரள மாநிலம் பல முறை தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தின் சிறப்புகளை சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை செயலாளர் ராணி ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.