பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரில் திருவள்ளுவர் நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரு அல்சூரில் உள்ள தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பூங்காவில் புதன்கிழமை திருவள்ளுவர் நாள்விழா உற்சாகமாக நடந்தது. பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் இராமசுப்ரமணியன், துணைச்செயலாளர் அமுதபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கர்நாடகமாநில அதிமுக இணைச்செயலாளர் எஸ்.டி.குமார், கர்நாடகத்தமிழ்மக்கள் இயக்கத்தலைவர் சி.இராசன், தமிழ்ச் சங்கம் நலன் காப்போர் குழுவினர் கோபாலகிருஷ்ணன், இறையடியான், சாந்தகுமார், மாரி, வேளாங்கன்னி, கர்நாடகத்தமிழர் முன்னேற்றக்கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், செயலாளர் சுரேஷ், ஐடிஐ தமிழ்மன்றச்செயலாளர் கு.மாசிலாமணி, செயற்குழு உறுப்பினர்கள் ஆஞ்சிநேயன், கருணாகரன், லாரன்ஸ், தன்னுரிமை மனமகிழ்மன்ற நிர்வாகிகள் கே.ராஜசேகர், கே.தங்கவேல், ஆர்.கணேஷ், எம்ஜிஆர் மன்றச்செயலாளர் சுந்தரவடிவேலு, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ராஜன் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருவள்ளுவர் சிலை பூங்கா வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டிருந்தது.
கர்நாடகத்தமிழர் முன்னேற்றக்கழக அறக்கட்டளை சார்பில் ஜெகஜீவன்ராம்நகரில் இருந்து திருவள்ளுவர், சர்வக்ஞர் அலங்காரத்தேர் ஊர்வலம் புதன்கிழமை புறப்பட்டது. இந்த தேர், பக்ஷிதோட்டம், வேலுமுருகபுரம், சித்தார்த்தநகர், அஞ்சனப்பாதோட்டம், ஜெய்பீம்நகர், பிளவர்தோட்டம், துரைசாமிநகர், முனிசாமிநகர், சம்பங்கிநகர் வழியாக திருவள்ளுவர் சிலையை அடைந்தது. இந்தத் தேரை தமிழ்ச்சங்கத்தலைவர் தி.கோ.தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.