குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது அவசியம் என இந்திய அறிவியல் கழகத்தில் பெங்களூரு குடிநீர்ப் பிரிவு தலைமை அதிகாரி சிவக்குமார் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கட்டடங்களில் தூயகுடிநீர், குடிநீர் சிக்கனம் குறித்த கோத்ரேஜ் குழுமத்தினர் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அவர் பேசியது: பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் குடிநீர் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், கட்டடங்கள் கட்டுவதற்கு முன்பு நிலத்தில் நீர்வளம் உள்ளதா என்பதனை கண்டறித்து, அதில் கட்டடங்களைக் கட்டுவது அவசியம்.
குறிப்பாக அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டுபவர்கள் நீர்வளத்தை ஆய்வு செய்த பின்னரே கட்டடங்களை கட்ட வேண்டும். மேலும், தூய குடிநீரை வழங்குவது தொடர்பான தொலைநோக்குத் திட்டத்தையும் வடிக்க வேண்டும். அதே நேரத்தில் குடிநீர் வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கோத்ரேஜ் குழுமத்தின் தென்னிந்திய வர்த்தகத் தலைவர் உதய்பாஸ்கர் பேசியது: தேசிய அளவில் நீர்வளம் குறைந்து வரும் நிலையில், கோத்ரேஜ் குழுமத்தினர் கட்டும் கட்டடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தூய குடிநீரை வழங்குவதோடு, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தி வருகிறோம். வரும் காலங்களில் குடியிருப்புகளில் தூய குடிநீர், குடிநீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.