பெங்களூரில் 2 அடுக்குமாடிக் கட்டடங்கள் சரிந்து விழுந்ததில், 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரு புலிகேசிநகர் குக்டவுன் 2-ஆவது குறுக்குச் சாலையில் உள்ள 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடியும், அதன் அருகில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டடமும், புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென சரிந்து விழுந்தன. இதில் அடுக்குமாடிக் கட்டடத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நாராயண் (35) மற்றும் நிர்மலா (27), அனுஷா (3) ஆகியோர் இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்தனர். கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடத்தில் தங்கியிருந்த மஞ்சுதேவியும் (38) இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்தார்.
காயமடைந்த உத்தம், சந்தோஷ், உமேஷ்குமார், அமீர், சித்தாம் உள்ளிட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளிடையே மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தை துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மேயர் கங்காம்பிகே, துணை மேயர் பத்ரே கெளடா ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது: அனுமதியில்லாமல் அடுக்குமாடிகள் கட்டப்படுவதால், அவை இடிந்து விழுகின்றன. தற்போது இடிந்து விழுந்த கட்டடத்தின் மேல் மாடியும் அனுமதி இல்லாமலேயே கட்டப்பட்டுள்ளது. சரிந்து விழுந்த 2 கட்டடங்களின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களை பரிசோதனை செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை மாநகாட்சியே ஏற்றுக் கொள்ளும் என்றார் துணை முதல்வர்.