பெரும்பான்மை இழந்துள்ளதால், முதல்வர் குமாரசாமி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ், மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். சுயேச்சையாக வெற்றி பெற்று அமைச்சர்களாகப் பதவி வகித்த நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பதவியை ராஜிநாமா செய்து தாங்கள் கொடுத்த கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்க வேண்டும் என்று கோரி, மும்பையில் தங்கியுள்ள 10 எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை ஜூலை 16-ஆம் தேதி முதல் வழக்காக வர உள்ளது. விசாரணை மீதான தீர்ப்பு என்ன வேண்டுமானாலும் வரலாம். இந்த நிலையில், பதவியை ராஜிநாமா செய்துள்ள ஆனந்த் சிங், ராமலிங்க ரெட்டி, சுதாகர், எம்.டி.பி.நாகராஜ், ரோஷன் பெய்க் ஆகியோரும் தங்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ஏற்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இந்த நிலையில், அதிருப்தியடைந்து, எல்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளவர்களை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். உச்சநீதிமன்றத்துக்கு சென்ற பின்னர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தேவையில்லாதது. அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
இந்த அரசு விரைவில் விலக வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஜூலை 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்குமென்று நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.