மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டு திறமையும் அவசியம் என்றார் மேயர் கங்காம்பிகே.
பெங்களூரு ஜெயநகர் கித்தூர் ராணிசென்னம்மா விளையாட்டுத் திடலில் வியாழக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான 3 நாள்கள் நடைபெறும் கைப்பந்து போட்டியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், கல்வியுடன் விளையாட்டுத் திறமையையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் சிறந்த கல்வியைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். மாநில அளவில் கைப்பந்தில் சிறந்து விளங்குபவர்களை தேசிய அளவிற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, விளையாட்டு வீரர்கள் சிறக்க வேண்டும். கர்நாடகத்தில் கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களுக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது வருத்தமளிக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, எம்எல்ஏ செளம்யா ரெட்டி, மாமன்ற உறுப்பினர் என்.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.