பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணபித்திருந்த மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் செய்ய கர்நாடக தேர்வு ஆணையம் கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது.
இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக பொது நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் வழியே விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்திருந்த மாணவர்கள், சில விவரங்களை தவறாகப் பதிவுசெய்துள்ளதாகவும் அதை திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டிருந்தனர்.
மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பப் படிவங்களில் சாதி உள்பிரிவு, கன்னட பயிற்றுமொழி, ஊரக இடஒதுக்கீடு, ஹைதரபாத்-கர்நாடக சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு தலைப்புகளில் திருத்தம் செய்வதற்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உரிய உறுதிச் சான்றிதழ்களுடன் நிர்வாக அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரியை அணுகி விண்ணப்பப் படிவங்களில் மே 31-ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜூன் 3-ஆம் தேதிமாலை 5.30 மணிவரை திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://kea.kar.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.