முதுகெலும்பில் ஊடுருவும் காசநோயினால் கை, கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படும் என்று முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் அம்ரித்லால் மாஸ்கேரன்ஹாஸ் தெரிவித்தார்.
பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற முதுகெலும்பு காசநோய் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியது: சர்வதேச மக்கள்தொகையில் 5-இல் ஒரு பகுதியினர் காசநோயினால் பாதிக்கப்படுகின்றனர். காச நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சளி, இருமல் பிரச்னை இருக்கும்.
உடலை உருக்கிவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பிரச்னையில்லை. ஆனால், ஒரு சிலர் நோயை முற்றச் செய்வதால், அது முதுகெலும்பிலும் ஊடுருவும். முதுகெலும்பில் காச நோய் ஊடுருவினால் கை, கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.
எனவே, காசநோய்க்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெறுவது அவசியம். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விக்ரம் உள்ளிட்ட ஒரு சில மருத்துவமனைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மருத்துவர் வசுநேத்ரா காசர்கோடு, விக்ரம் மருத்துவமனை மேலாண் இயக்குநர் சோமேஷ் மித்தல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.