கர்நாடக சட்டப்பேரவைக்கு இடைக்காலத் தேர்தல் நடக்காது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.
இது குறித்து ஹுப்பள்ளியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக சட்டப்பேரவைக்கு வெகு விரைவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறும் என்பது சாத்தியமில்லாதது. அது போன்ற நிகழ்வு கற்பனையானது. மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 5 ஆண்டுகாலப் பதவியை நிறைவு செய்யும். இது தொடர்பாக யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஒருவேளை சட்டப்பேரவைக்கு இடைக்காலத் தேர்தல் நடக்கும் சூழ்நிலை வந்தால், ஜனநாயகத்தின் அடிப்படையில் செயல்படுவோம். ஆனால், அது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள மாட்டோம்.
தேர்தல்களில் வெற்றி-தோல்வி இயல்பானது. ஆனால், ஆட்சி நிர்வாகத்தை யார் நடத்த வேண்டுமென்பதை மக்கள் தீர்மானிக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் ஆய்வுசெய்யும். அதேபோல, தோல்விக்கான காரணத்தை சரிசெய்ய வேண்டும்.
ஹுப்பள்ளி, தார்வாடில் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. இப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது குடிநீர் விநியோகிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதைச் செயல்படுத்த போதுமான நிதி ஆதாரம் உள்ளது. ஹுப்பள்ளி, தார்வாடில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் வெகு விரைவில் நிறைவடையும் என்றார் அவர்.