எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடைபெறுவதால், தேர்வு மையங்களைச் சுற்றி 200 மீட்டர் பரப்பளவுக்குள் உள்ள நகலகங்களை மூட மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: மாநில அளவில் மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப். 4-ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி பெங்களூருவில் உள்ள தேர்வு மையங்களைச் சுற்றி 200 மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நகலகங்களை (ஜெராக்ஸ் சென்டர்) மூட மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வையொட்டி தேர்வு மையங்களைச் சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது மையங்களைச் சுற்றி 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.