முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் நடிகை சுமலதா சந்தித்து, மண்டியா தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக முன்னணித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா திடீரென சந்தித்துப் பேசினார்.
அப்போது, மண்டியா தொகுதியில் இருந்து, தான் போட்டியிடுவது தொடர்பாக எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் சுமலதா ஆலோசனை நடத்தினார். தனக்கு பாஜக ஆதரவளிக்க வேண்டுமென்று சுமலதா கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியது: மண்டியா தொகுதியில் வேட்பாளராக சுமலதாவை நிறுத்துவது தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களிடம் பேசிய பிறகு இறுதி முடிவெடுக்கப்படும். மண்டியா தொகுதியில் பாஜக தனது வேட்பாளரை நிறுத்துமா? அல்லது சுமலதாவுக்கு ஆதரவளிக்குமா? என்பது
குறித்து கட்சியினரிடம்
விவாதிக்கப்படும்.
அனைவருடனும் விரிவாக ஆலோசித்த பிறகு, இறுதி முடிவெடுக்கப்படும். தான் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான விவரங்களை மார்ச் 18-ஆம் தேதி சுமலதா பகிரங்கமாக அறிவிக்க இருக்கிறார். அன்றைக்கு பாஜகவும் தனது முடிவைத் தெரிவிக்கும்.
சுமலதா சுயேச்சையாகப் போட்டியிட்டால் ஆதரிப்பீர்களா? என்றால், கட்சி ஆதரிக்கும் வேட்பாளரை நான் ஆதரிப்பேன் என்றுதான் கூற முடியும். சுமலதாவை பாஜக வேட்பாளராக நிறுத்தினால் அது பாஜகவுக்கு பலம் சேர்க்கும் என்றார்.