பாஜக தொடர்ந்து முயற்சி செய்தாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு கவிழாது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து, அதனை கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சி மேலும் அதிகமாகியுள்ளது. பாஜக தொடர்ந்து முயற்சி செய்தாலும் கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது.
முதல்வர் மாற்றம் இல்லை: கர்நாடகத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை. எனவே, முதல்வர் பதவிக்கான போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளது என்றாலும், மீண்டும் மாநிலத் தலைவர் பதவியை வகிக்கும் எண்ணம் இல்லை
என்றார்.
காங்கிரஸை குறை கூற வேண்டாம்: இதையடுத்து, "தனது தோல்விக்கு, அமைச்சர் தேஷ்பாண்டே சரியாகப் பணியாற்றாததே காரணம்' என்று "வட கர்நாடக மக்களவைத் தொகுதி மஜத வேட்பாளர் ஆனந்த ஆஷ்நோட்டிகர் கூறியுள்ள புகார் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஆர்.வி.தேஷ்பாண்டை கூறுகையில், "புகாரில் உண்மையில்லை. தொகுதியில் மஜதவுக்குத் தேவையான பலம் இல்லாததால், ஆனந்த ஆஷ்நோட்டிகர் தோல்வி அடைய நேர்ந்தது. நிலைமை அப்படி இருக்கையில் காங்கிரஸை குறை கூறுவதை ஏற்க முடியாது' என்றார் அவர்.