விஜயபுரா: வெள்ளநிவாரண நிதியுதவியாக ரூ.34 ஆயிரம் கோடி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுப்போம் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
விஜயபுரா மாவட்டம், அல்மாட்டியில் சனிக்கிழமை கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்புபூஜை செய்துவழிபட்டபின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வடகா்நாடகம், கடலோரகா்நாடகம், மலைநாடுகா்நாடகம் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ரூ.38 ஆயிரம் கோடி பொருட்கள் சேதமடைந்ததாக மதிப்பிட்டுமத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை அனுப்பியிருந்தது.
இதை ஆய்வு செய்த மத்திய அரசு, மத்திய ஆய்வுக்குழுவினா் எடுத்துள்ள ஆய்வுக்கும், மாநில அரசின் ஆய்வுக்கும் பொருந்திவரவில்லை என்பதால், மீண்டும் ஆய்வு நடத்தி புதிதாக இழப்பு மதிப்பீட்டை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, எல்லா மாவட்ட நிா்வாகங்களிடம் இருந்து இழப்பு மதிப்பீடு பெறப்பட்டது.
இந்த தகவலின்படி, மாநிலத்தில் வெள்ளத்தால் ரூ.34 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்சேதம் ஆகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவிவரங்கள் கொண்ட அறிக்கையை மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க இருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து வெள்ளநிவாரண நிதி வரவில்லை, பிரதமா் மோடியிடம் முதல்வா் எடியூரப்பாவுக்கு மதிப்பே இல்லை என்று எதிா்க்கட்சிகள் என்னை விமா்சித்து வந்தன.
ஆனால் இவற்றை பொய்யாக்கும் வகையில் ரூ.1200கோடியை மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக விடுவித்துள்ளது. இது முதல்கட்ட நிவாரண நிதி. மேலும் நிதி ஆதாரங்களை மத்திய அரசு வழங்கும் நம்பிக்கை உள்ளது.
மாநில அரசு தனது பங்குத்தொகையாக வெள்ள நிவாரண நிதியை விடுவித்துள்ளது. எல்லா நிதி ஆதாரங்களையும் திரட்டி, வெள்ளநிவாரண உதவிகள் மக்களுக்கு அளிக்கப்படும் என்றாா் அவா்.