காங்கிரஸை அழிக்க பாஜக சதி செய்து வருவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளதை கண்டித்து, பெங்களூரு ஆனந்த்ராவ் சதுக்கத்தில் புதன்கிழமை காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்துக்கு தலைமையேற்று அவர் பேசியது:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார், கடுமையாக உழைத்து தலைவராக உயர்ந்திருக்கிறார். கிராமத்தில் இருந்து தில்லி வரைக்கும் டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். கட்சியின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கும் டி.கே.சிவக்குமார் போன்ற காங்கிரஸ் தலைவர்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாத மத்திய பாஜக அரசு, அவர்களை முடக்க முயற்சிப்பது கோழைத்தனமான அரசியலாகும்.
பாஜகவினரின் பழிவாங்கும் அரசியலை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை, ஒருநாள் பாஜகவினருக்கும் ஏற்படலாம். காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு பாஜக சதி திட்டம் தீட்டி செயல்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
சிபிஐ, அமலாக்க இயக்குநகரம், சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டி அடக்க பார்க்கிறார்கள். விசாரணை அமைப்புகளை அரசியல் பழிவாங்குவதற்காக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பின்வாங்க மாட்டார்கள். மத்தியஅரசு தனது தோல்விகளை மறைக்க காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து கைதுசெய்து வருகிறது. இதை காங்கிரஸ் தலைவர்கள் தீரத்துடன் எதிர்கொள்வார்கள் என்றார். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.