மகாத்மா காந்தி சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாத்மா காந்தியின் கொள்கைகளின் அடிப்படையில் மக்கள் சேவையாற்றி வரும் தனி ஆள் மற்றும் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் மகாத்மாகாந்தி சேவை விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் 60 வயதான தனி ஆள், 25 ஆண்டுகளாக பங்காற்றிவரும் நிறுவனங்களிடம் இருந்து மகாத்மா காந்திவிருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும். இந்த விருது வருகிற அக்.2-ஆம் தேதி நடக்கும் விழாவில் அளிக்கப்படும். மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, பெண் முன்னேற்றம், ஊரக தூய்மை, கதராடை பயன்பாடு, சுதேசி பொருள்கள் பயன்பாடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மேம்பாடு, மது பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் ஆகியப் பணிகளில் ஈடுபட்டுவரும் தனி ஆள் மற்றும் நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களை விருதுக்கு பொதுமக்களில் இருந்து பரிந்துரைசெய்யலாம்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பீமனகெளடா சங்கனகெளடா பாட்டீல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விருது தேர்வுக்குழு, விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும். விண்ணப்பங்களை vartheinfohub@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது இயக்குநர், செய்தி மற்றும் மக்கள்தொடர்பு, பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.