முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது மத்திய பாஜக அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் புதன்கிழமை நடந்த போராட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அமலாக்க இயக்குநகரத்தின் சார்பில் தேவையில்லாமல் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். டி.கே.சிவக்குமாரை கைதுசெய்துள்ளதன் மூலம் கர்நாடகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை முடக்க மத்திய அரசு முயற்சித்துவருகிறது.
தன்னியல்பாக செயல்பட வேண்டிய அமலாக்க இயக்குநரகம், சிபிஐ, வருவாய்த் துறை போன்றவற்றை தூண்டிவிட்டு அரசியல் எதிரிகளை பழிவாங்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தூண்டுதலால் அமலாக்க இயக்குநரகம் டி.கே.சிவக்குமாரை கைது செய்துள்ளதை கர்நாடகமக்கள், கட்சிபாகுபாடு இல்லாமல் அனைவரும் கண்டித்துவருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார், அவரது குடும்பத்தினரை விசாரணை என்ற பெயரில் ஒடுக்க முயற்சிக்கிறது என்றார்.
முன்னாள் அமைச்சர் கிருஷ்ண பைரேகெளடா பேசுகையில்,"மத்திய அரசு கோழைத்தனமான அரசியலில் ஈடுபட்டுவருகிறது. அரசியல் ரீதியாக டி.கே.சிவக்குமாரை பழிவாங்கவே அமலாக்க இயக்குநரகத்தின் வழியாக அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சிபிஐ, வருவாய்த் துறை, அமலாக்க இயக்குநரகம் போன்றவற்றை பாஜக தனது கைப்பாவையாக பயன்படுத்தி, அரசியல் எதிரிகளை பந்தாடி வருகிறது.
எதிர்க்கட்சிகளை அரசியல் களத்தில் சந்திப்பதைவிடுத்து, பழிவாங்க துடிப்பது ஏன்? அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணைக்கு டி.கே.சிவக்குமார் முழு ஒத்துழைப்பு அளித்திருந்தபோதும், அவரை கைதுசெய்துள்ளனர் என்றார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வி.எஸ்.உக்ரப்பா, ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் பேசினர்.