நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை விரைவில் சீரடையும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசின் 100 நாள் சாதனை மலரை வெளியிட்டு அவர் பேசியது: -
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப் பிரிவை நீக்கியது பெரும் சாதனையாகும். இதன் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் என்பது நிரூபணமாகியுள்ளது.
2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பில் பொருளாதாரம் உயர்த்தப்படும். நாட்டில் பல துறைகள் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், ஆட்டோமொபைல் துறை சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதேபோல பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. விரைவில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெறுவதோடு, நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை சீரடையும். தாவணகெரேயில் தனியார் உரத் தொழில்சாலை தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
வழங்கியுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் அதிகம் என்றாலும், அதைவிட உயிர்கள் விலை மதிக்கமுடியாதவை என்பதனை அனைவரும் உணர வேண்டும். அபராதம் அதிகம் என்பதால் விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைப்பிடிப்பார்கள் என்பதனை உணரவேண்டும்.
கர்நாடகத்தில் அபராதத் தொகையைக் குறைக்க முதல்வர் எடியூரப்பா நடவடிக்கை எடுக்க உள்ளார்.
முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்ததைக் கண்டித்து புதன்கிழமை ஒக்கலிகா சமுதாயத்தினர் நடத்திய பேரணியில் காங்கிரஸ் கட்சியினரே அதிகம் கலந்து கொண்டனர் என்றார்.