இடைத்தேர்தல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு பெரும் பின்னடைவு

 தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களில் 15 பேருக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது,


 தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களில் 15 பேருக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது,
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதங்களை அப்போதைய பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் அளித்திருந்தனர். இதனிடையே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸும், மஜதவும் தனித்தனியே மனுக்கள் அளித்திருந்தன.
எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்க மறுத்த அப்போதைய பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், 17 பேரையும் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதுதொடர்பான அடுத்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் செப். 23-ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் அறிவிப்பை எடுத்துக்கூறி பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்துசெய்யக் கோரி முறையிடுவதென முடிவுசெய்துள்ளனர். மேலும், இடைத்தேர்தலுக்கும் தடை விதிக்குமாறும் கேட்டுக்கொள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் முடிவுசெய்துள்ளனர்.
முதல்வருடன் ஆலோசனை: இடைத்தேர்தல் தேதி வெளியானதும் பெங்களூரில் சனிக்கிழமை முதல்வர் எடியூரப்பாவை சந்தித்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், தேர்தலில் போட்டியிட முடியாது என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறியுள்ளதை எடுத்துக் கூறினர்.
தவறாக வழிகாட்டி தங்களது அரசியல் எதிர்காலத்தை நாசமாக்கிவிட்டதாக முதல்வர் எடியூரப்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், தங்களை காப்பாற்ற பாஜக முன்வராததற்கு அதிருப்தி தெரிவித்தனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்திய முதல்வர் எடியூரப்பா, உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும்; நீங்களே தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்டுக்கொள்ள விரும்பாத தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அங்கிருந்து கோபமாக வெளியேறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தில்லி பயணம்: இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றுகூடி விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர்களை சந்தித்து வழக்கு விசாரணையை கவனிப்பதற்காக 17 பேரும் சனிக்கிழமை புது தில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. எஸ்.டி.சோமசேகர் கூறுகையில், பேரவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் வழக்கு செப். 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. இதுதொடர்பாக வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்த 17 பேரும் புது தில்லிக்கு செல்ல இருக்கிறோம்.
தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்த முற்பட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவருவோம். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும். எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்போம்.
இடைத்தேர்தலில் நாங்களே வேட்பாளராக போட்டியிடுவோம். ஆனால், பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறோமா? என்பதை உறுதியாக கூறமுடியாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com