"சைபர் குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு அவசியம்'
சைபர் குற்றங்களைத் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆன்டி-வைரஸ் ஆசிய ஆராய்ச்சியாளர் சங்கத்தின் மூத்த செயல் அதிகாரி கேசவர்த்தனன் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ஆன்டி-வைரஸ் ஆசிய ஆராய்ச்சியாளர் சங்கத்தின் (ஏவிஏஆர்) சார்பில் நடைபெற்ற சைபர் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியது: சர்வதேச அளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதைத் தடுப்பதற்கு அரசு உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. இந்தியாவில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சைபர் குற்றங்களுக்கும் அதிகரித்துள்ளன. பெரும்பாலான குற்றங்கள் செல்லிடப்பேசி, இணையதளங்களின் வழியாக நடைபெறுகின்றன. எனவே இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் வழங்கும் ஆலோசனைகளை கேட்டு தீர்வுக்கான வழிகளை ஆராய்வோம் என்றார். நிகழ்ச்சியில் ஆன்டி-வைரஸ் ஆசிய ஆராய்ச்சியாளர் சங்கத்தின் தலைவர் ஆலன்டயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.