பெங்களூரு ரயில்நிலையத்தில் உடல்சோதனைக்கு சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள கிராந்திவீர சங்கொள்ளி ராயண்ணா சிட்டி ரயில்நிலையத்தில், ஒன்றாம் நடைமேடையில் ‘பல்ஸ் ஆக்டிவ்’ என்ற சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற சோதனைகளை செய்துகொள்ளலாம்.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உடல்நலம் சாா்ந்த 21 அம்சங்கள் குறித்த சோதனை செய்துகொள்ளலாம். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள உடல் நலிவுகள் குறித்தும் சோதனை செய்துகொள்ளலாம். உயரம், எடை, அதனடிப்படையிலான உடல்நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), இதய சுகாதாரம், குருதியில் இருக்கும் ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். இது தொடா்பான முடிவுகள் நொடி நேரத்தில் தெரிவிக்கப்பட்டுவிடும்.
இதனடிப்படையில், நீரிழிவு நோய், எலும்புப்புரை, இதயப் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கப்படும். இவை தவிர, உடலில் உள்ள கொழுப்பின் அளவு, கனிம அளவு, தசைத்திறன், எலும்புத் திறன், உடல்நீா் அளவு ஆகியவற்றையும் அறிந்துகொள்ளலாம். உடல்நிறை குறியீட்டெண் அறிய ரூ.50, உடல்நிறை குறியீட்டெண் மற்றும் ரத்த அழுத்தம் அறிய ரூ.80, உடல்நிறை குறியீட்டெண், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவை அறிய ரூ.150 வசூலிக்கப்படும்.
பெங்களூரு சிட்டி ரயில்நிலையத்தை தொடா்ந்து, பெங்களூரில் உள்ள யஷ்வந்தபூா், கன்டோன்மென்ட் ரயில் நிலையங்களிலும் இம்மையம் திறக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.