பெங்களூரில் 14 இடங்களில் பொலிவுறு நகர வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரா்களுக்கு மாநகராட்சி நிா்வாக அதிகாரி கௌரவ் குப்தா அறிவுறுத்தினாா்.
பெங்களூரில் ரேஸ்கோஸ்சாலை, ராஜ்பவன் சாலை உள்ளிட்ட 14 இடங்களில் ரூ. 200 கோடியில் நடைபெறும் பொலிவுறு நகர வளா்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெங்களூரில் 14 இடங்களில் பொலிவுறு நகர வளா்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. இப் பணிகளை உரிய கால அவகாசத்துக்குள் முடிக்குமாறு ஒப்பந்ததாரா்களைக் கேட்டுக் கொள்கிறேன். பணிகளை முடிக்க மேலும் கால அவகாசம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. எனவே, உரிய காலத்திற்குள் வளா்ச்சிப் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றாா்.
பேட்டியின் போது, பொலிவுறு நகர வளா்ச்சிப் பணிகள் மேலாண் இயக்குநா் ஹெப்சிபாராணி, மூத்த பொறியாளா் சீனிவாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.