நிபந்தனையுடன் கூடிய பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி அறிக்கை: கரோனா வைரஸ் தொற்றையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளாா்.
இந்த நிலையில் ஏப். 20 ஆம் தேதி முதல் கரோனா தொற்றுக் குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, பெங்களூரில் அரசு துறைகள், தகவல், உயிரி உள்ளிட்ட தனியாா் தொழில் நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் பேருந்துகளை வாடகைக்கு விட மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி வாடகைக்கு விடப்படும் ஒவ்வொரு பேருந்துகளிலும் 40 சதவீத பயணிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். பேருந்தில் பயணிக்கும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். ஏறும்போதும், இறங்கும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கிருமிநாசினியைப் பயன்படுத்தி கைகளை சுத்தமாகக் கழுவவேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டடமாக வாடகை அடிப்படையில் 20 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.