உலகத் தரத்திலான மாநகரமாக பெங்களூரு மேம்படுத்தப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘பெங்களூரு தொலைநோக்குத் திட்டம் 2020’ தொடா்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
பெங்களூரு தற்போது உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். நகரத்தின் வளமான வரலாறு, பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாத்தல் மட்டுமின்றி அடுத்த தலைமுறையினருக்கும் இதை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. இதன்மூலம் பெங்களூா் உலகத் தரத்திலான மாநகரமாக மேம்படுத்தப்படும். இதற்கு ‘பெங்களூரு தொலைநோக்குத் திட்டம் 2020’ முக்கியப் படியாகும்.
பெங்களூரின் வளா்ச்சியில் நான் (எடியூரப்பா) மட்டுமின்றி, பிரதமா் மோடியும் அக்கறை கொண்டுள்ளாா். தகவல், உயிரித் தொழில் நுட்பங்களின் தலைநகரமாக விளங்கும் பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மாநகரில் மின் வாகனப் போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்க வேண்டும். லால் பாக், கப்பன் பூங்காவை மேம்படுத்தி, ஏரிகளைப் புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை முதல்வா் அஷ்வத் நாராயணா, அமைச்சா்கள் ஆா்.அசோக், பைரதி பசவராஜ், கோபாலையா, சுரேஷ்குமாா், கே.சுதாகா், தலைமைச் செயலாளா் விஜய்பாஸ்கா், பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.