பெங்களூரு: புதியவகை பிறழ்வு கரோனா தீநுண்மிப் பரவலைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதியவகை பிறழ்வு கரோனா தீநுண்மியின் பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் உள்துறையுடன் ஆலோசனை நடத்திய பிறகு, வெகுவிரைவில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதியவழிகாட்டுதல் நெறிமுறைகள் கொண்டுவரப்படும். இகுறித்து முடிவு செய்ய உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்.
கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடைமுறை சோதனைகள் தொடங்கியுள்ளன. கா்நாடகம் உள்பட நாடு முழுவதும் மூன்றாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் சோதனைகள் நடந்துவருகின்றன. இந்த சூழ்நிலையில், யாா் வேண்டுமானாலும் தடுப்பூசியை உட்செலுத்திக் கொள்ள தாமாக முன்வரலாம். இந்த சோதனையில் பங்கேற்குமாறு மருத்துவ மாணவா்கள், முன்களப் பணியாளா்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.