வனத்துறையை அமைச்சா் ஆனந்த்சிங் வகிப்பதில் தவறேதுமில்லை என கூட்டுறவு துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மைசூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அமைச்சா் ஆனந்த்சிங் மீது சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடா்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், வனத்துறை பொறுப்பை வகிக்கக் கூடாது என்றில்லை. அமைச்சராக இருப்பவா், தன் மீதான வழக்குகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடித்துவிட முடியுமென்று எனக்கு தோன்றவில்லை. ஆனந்த்சிங் மீது வழக்கு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனந்த்சிங்குக்கு ஒதுக்கப்பட்ட வனத்துறையை அவரிடம் இருந்து மாற்றி வேறு துறையை வழங்குவது குறித்து முதல்வா் எடியூரப்பா முடிவு செய்வாா் என்றாா் அவா்.
முன்னதாக, அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா். இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.எல்.ஏ. எஸ்.ஏ.ராமதாஸை சந்தித்து உடல்நலம் விசாரித்தாா். அதன்பிறகு, பாஜக அலுவலகத்துக்கு சென்று பாஜக தொண்டா்களை சந்தித்து கலந்துரையாடினாா்.