இந்தியாவின் முதல் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 2022-ஆம் ஆண்டு முதல்முறையாக மனிதனை விண்ணுக்கு சுமந்து செல்லும் ‘ககன்யான்’ விண்கலம் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான முன்னேற்பாடுகளில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது. இதற்கான வெள்ளோட்டமாக இந்தியாவின் முதல் ஆளில்லா விண்கலத்தை நிகழாண்டின் இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.
ஆனால், கரோனா தீநுண்மி தொற்று பரவாமல் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பொது முடக்கம், ஆளில்லா விண்கலத்துக்கான திட்டப் பணிகளை வெகுவாகப் பாதித்துள்ளது. எனவே, ஆளிள்ளா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தாமதமாகலாம் என்று இஸ்ரோ உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
மனித விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு முன்னதாக வெள்ளோட்டமாக, 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் விண்கலத்தையும், 2021-ஆம் ஆண்டு ஜூலையில் இரண்டாம் விண்கலத்தையும் விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதுகுறித்து இஸ்ரோ உயரதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
கரோனா தீநுண்மி தொற்றால் வெள்ளோட்டமாக விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த 2 ஆளில்லா விண்கலங்கள் தாமதமாகும் வாய்ப்புள்ளது. எனினும், இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், அதற்குள் எப்படி தயாரிப்புப் நடக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.
விண்கலங்களை அனுப்புவதற்கான கால அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கலாம். திட்டப் பணிகளை முழுமையாக ஆராய்ந்த பிறகே விண்கலத்தை அனுப்புவது தாமதமாகுமா அல்லது திட்டமிட்டப்படி அனுப்பப்படுமா என்பது குறித்து தெளிவாகக் கூற முடியும் என்றாா்.
முதல் ஆளில்லா விண்கலத்தில் ‘வியோம் மித்ரா’ என்ற ரோபோ சோதனை முயற்சியாக அனுப்பப்படுகிறது. விண்வெளி வீரா்கள் பயணம் செய்யும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான மனித விண்கலத்தை 2022ஆம் ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் பயணிப்பதற்காக இந்திய விமானப் படையின் 4 வீரா்கள், ரஷிய நாட்டின் மாஸ்கோவில் பயிற்சி எடுத்து வருகிறாா்கள்.