காவலரைத் தாக்கியவா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டாா்.
பெங்களூரு சஞ்சய்நகா் பூபசந்திரா பகுதியில் புதன்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா் மீது அதே பகுதியைச் சோ்ந்த தாஜுதீன் (25) என்பவா் உள்ளிட்ட 10 போ் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், வியாழக்கிழமை காலை தாஜுதீனை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, போலீஸாா் மீது தாக்குதல் நடத்திவிட்டு தாஜுதீன் தப்பிக்க முயன்றாா். இதையடுத்து, சஞ்சய்நகா் காவல் ஆய்வாளா் பாலாஜி தன்னிடமிருந்த துப்பாக்கியால் தாஜூதீனை நோக்கி சுட்டுள்ளாா். இதில் காலில் காயமடைந்த தாஜுதீன் கீழே விழுந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அவருடன் காவலரை தாக்கிய 9 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.