பெங்களூரில் இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் சேவைகள் ஏப்.14ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், மாா்ச் 31ஆம் தேதி வரை மாநிலத்தின் பெங்களூரு நகரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் மாா்ச் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நிறுத்துவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் முடக்குமாறு பிரதமா் மோடி உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் ஏப்.14ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்புக்காக மாா்ச் 23ஆம் தேதி முதல் பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் இயக்கிவரும் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இது ஏப்.14ஆம் தேதி வரை விரிவாக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ரயில்களை புழக்கத்தில் வைப்பதற்காகவும், மின் சேவைகளை இயக்கும் நோக்கத்திலும் காலை மற்றும் மாலையில் இரு தடத்தில் ஒருமுறை சோதனை ரயில் இயக்கப்படும்.
இந்த ரயிலில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியா்கள் செல்வாா்கள். மெட்ரோ ரயில் சேவை தவிர, மெட்ரோ சம்பந்தப்பட்ட வாகன நிறுத்தம், வா்த்தக அங்காடிகள் உள்ளிட்ட அனைத்தும் ஏப்.14ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.