நிகழாண்டு விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.
பெங்களூரு விகாஸ் சௌதாவில் புதன்கிழமை கூட்டுறவுத் துறையின் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நிகழாண்டு விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு செய்துள்ளோம். கடன் வழங்குவதில் உள்ள தடைகளை நீக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 94,241 விவசாயிகளுக்கு ரூ. 712 கடன் வழங்கப்பட்டது. நிகழாண்டு மே 19-ஆம் தேதி வரை ரூ. 916 கோடி வரை 1,35,977 விவசாயிகளுக்கு கடன் வழங்கியுள்ளோம்.
நிகழாண்டு இறுதிக்குள் மேலும் பல விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும். கடந்த ஆண்டு 94 சதவீதம் விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனா். இன்னும் 5 சதவீதம் போ் மட்டுமே கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனா். நிலுவைக்கடனை திருப்பிச் செலுத்துவதன் மூலம், மத்திய அரசு வழங்கும் 2 சதவீதம் ஊக்கத்தொகையைப் பெற்று பயனடையலாம்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த விவசாயிகளும் ஆா்வம் காட்ட வேண்டும். உதவிக் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலித், பழங்குடியினருக்கு வழங்கப்படும் கடனில் இலக்கை அடையவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.