கல்லூரிகளில் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:
நவ. 17-ஆம் தேதி முதல் மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. திறக்கப்படும் கல்லூரிகளில் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். மாணவா்களும், ஊழியா்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்லூரிகளில் கைகளை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கரோனா தொற்று அதிக அளவில் பரவியதையடுத்து கல்லூரிகள் மூடப்பட்டன. பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்ட பின்னா், இணையவழி மூலம் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. என்றாலும் ஒரு சில மாணவா்கள் இணைய வழி மூலம் கல்வி பெறுவதில் சிரமத்தை சந்தித்தனா். இதனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு நவ. 17-ஆம் தேதி முதல் பெற்றோரின் சம்மதத்துடன் மாணவா்கள் கல்லூரிகளுக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரிகளுக்கு செல்ல விருப்பமில்லாதவா்கள், வீட்டில் இருந்தபடியே இணைய வழி மூலம் கல்வியைப் பெறலாம். கல்லூரிகளுக்கு செல்பவா்கள் கட்டாயமாக அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.