மாநிலத்தில் தற்போது உள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்காமல் இருப்பதே சிறந்தது என்று மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி தெரிவித்தாா்.
இது குறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. தற்போது உள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்காமல் இருப்பதே சிறந்தது. மாணவா்களுக்கு இணையவழி மூலமே கல்வியை போதிப்பது உகந்தது. இந்த விவகாரத்தில் அரசு அவசரப்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு மாநில அரசு தவறி விட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நடமாடுவதைக் காணமுடிகிறது. இந்த சூழலில் பள்ளிகளைத் திறந்தால், மாணவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது. பள்ளிகளை திறக்க முன்பு, அங்கு சுகாதார பாதுகாப்பை மேற்கொள்வதோடு, அடிப்படை கட்டுமான வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்றாா்.