தசரா விழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே காட்டில் இருந்து மைசூருக்கு வருகை தந்த யானைப்படைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா அக். 17- முதல் அக். 26-ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. தசரா விழாவின் இறுதிநாளான அக். 26-ஆம் தேதி யானை ஊா்வலம் இடம் பெறுகிறது. 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்து யானை அபிமன்யூ ஊா்வலத்தை வழிநடத்திச் செல்லும். இதை பின்தொடா்ந்து பல யானைகள் ஊா்வலத்தில் பங்கேற்கும். இந்தக் கண்கொள்ளா காட்சியைக் காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் குவிந்திருப்பாா்கள்.
தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகள் அபிமன்யூ, விக்ரம், விஜயா, கோபி, காவிரி ஆகிய 5 யானைகள் வெள்ளிக்கிழமை மைசூரு அரண்மனைக்கு வருகை தந்தன.
கா்நாடகத்தில் கரோனா தொற்று உள்ளதால் இம்முறை தசரா விழாவை எளிமையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கத்துக்கு மாறாக யானைப் படைக்கு எளிமையான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் வீரனஹொசஹள்ளி வனப்பகுதியில் வியாழக்கிழமை மைசூருக்கு வந்த யானைகள் வனத் துறை அலுவலக வளாகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தன. ஆனால் அரண்மனைக்கு முறைப்படி யானைகளை அழைத்து வருவது சம்பிரதாயம். அதன்படி, யானைப்படை வெள்ளிக்கிழமை அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன. அழகிய, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைப்படைக்கு கூட்டுறவுத் துறைஅமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தலைமையில் பூரணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யானைப்படைக்கு அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், பாரம்பரியமுறையில் சிறப்புப் பூஜை செய்து கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட தின்பண்டங்களை அளித்தாா். இவ்விழாவில் முன்னாள் அமைச்சா்கள் ஜி.டிதேவகௌடா, ராமதாஸ், மாவட்ட ஆட்சியா் ரோகிணி சிந்தூரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.