பாஜக தலைவா்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை மேற்கொள்ள வேண்டும் என மாநில காங்கிரஸ் செய்தி தொடா்பாளா் எம்.லக்ஷமண் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனா். இது அரசியல் காழ்ப்புணா்ச்சியாகும். மத்திய அரசு சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை தனது கைப்பாவையாக ஆட்டி வைத்து வருகிறது.
டி.கே.சிவக்குமாா் அரசியல்வாதியாக மட்டுமல்லாது, தொழிலதிபராக, கட்டுனராக உள்ளாா். இதன் மூலம் அவரது வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை சோதனை செய்ய சிபிஐ அமைப்புக்கு அதிகாரமில்லை.
இது தொடா்பாக ஏற்கெனவே அமலாக்க இயக்குநர அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தோ்தல்களின் போது காங்கிரஸ் தலைவா்களின் இல்லங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வதை மத்திய, மாநில அரசுகள் வழக்கமாக கொண்டுள்ளன. தோல்வி பயத்தால், இது போன்ற நடவடிக்கைகளை ஆளும் பாஜக கட்சியினா் செய்து வருகின்றனா்.
ஊழலில் திளைக்கும் பாஜக தலைவா்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை மேற்கொள்ள வேண்டும். அப்போது அவா்களின் இல்லங்களில் கோடிக்கணக்கான பணம் கிடைக்கும் என்பது உறுதி என்றாா்.