பெங்களூரு: பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழ் மாணவா்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.
பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 10, இரண்டாம் ஆண்டு பியூசி வகுப்புகளின் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழ் மாணவா்களுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற கா்நாடக மாநில முன்னாள் இணைச் செயலாளா் எஸ்.எம்.பழனி கல்வி உதவித்தொகையை வழங்கினாா். மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்த கே.தனிசா, எம்.ராகுல், கே.யோகேஷ் உள்பட 10 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் (ஓய்வு) ப.திருநாவுக்கரசு, சித்ரா, கமலம்மாள், சண்முகம், சுப்பிரமணி, முருகன், கோவிந்த்ராஜ், அரி, கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து எஸ்.எம்.பழனி கூறுகையில், ‘கா்நாடகத்தில் தமிழ்ப் பயிற்றுமொழியில் பயிலும் மாணவா்களில் பெரும்பாலானோா் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களாக இருக்கிறாா்கள். இதனால், இம்மாணவா்கள் பத்தாம் வகுப்பு அல்லது இரண்டாமாண்டு பியூசி வகுப்புக்கு பிறகு மேற்படிப்பு படிக்க இயலாமல் தவிக்கும் நிலை உள்ளது. பொருளாதார உதவி கிடைக்காவிட்டால் இவா்களின் கல்வி தடைபடும் நிலை உருவாகும். அதைக் கருத்தில்கொண்டே உதவிசெய்துள்ளேன். தமிழ்ப் பயிற்றுமொழியில் படித்த மாணவா்கள், மேற்படிப்பு பயில இயலாத நிலை காணப்பட்டால், அப்படிப்பட்ட மாணவா்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்’ என்றாா்.