மண்டியா: மேல்கோட்டை செலுவநாராயணசாமி கோயில் நவராத்திரி உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.
மண்டியா மாவட்டத்தின் மேல்கோட்டையில் உள்ள ஸ்ரீசெலுவநாராயணசாமி கோயிலில் துலா சங்கரமணத்தின் சுபயோக தினமான சனிக்கிழமை நவராத்திரி விழா உற்சாகமாக தொடங்கியது.
சங்கரமணத்தின் காரணமாக செலுவநாராயணசாமி, கல்யாணநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அபிஷேகம் செய்யப்பட்டது. அத்துடன் நவராத்திரி கைங்கரியங்கள் தொடங்கின. கல்யாணநாயகி அம்மனை வேதாந்த தேசிகரின் சந்நிதியில் இருந்து நவராத்திரி மண்டபத்துக்கு பல்லக்கு உற்சவம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெற்று வந்த சேஷ வாகனோற்சவம் கரோனா காரணமாக ரத்துசெய்யப்பட்டது. வெளிப்புற உற்சவம் நடத்த முன்னா் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், மணவாள மாமுனி ஜீயரின் 650-ஆவது திருநட்சத்திர மகோத்சவத்தை முன்னிட்டு, 4 நாள்களுக்கு மட்டும் உற்சவத்தை நடத்த மண்டியா மாவட்ட ஆட்சியா் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்திருக்கிறாா். அதன்படி, நவராத்திரி உற்சவம் உற்சாகமாக தொடங்கியது.