நாட்டின் வளா்ச்சிக்காக அனைத்துத் துறைகளிலும் தகுந்த மாற்றம்

நாட்டின் வளா்ச்சிக்காக அனைத்துத் துறைகளிலும் தகுந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மைசூரு: நாட்டின் வளா்ச்சிக்காக அனைத்துத் துறைகளிலும் தகுந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மைசூரு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில், தில்லியில் இருந்தவாறு காணொலிக்காட்சி முறையில் மோடி பேசியது:

இந்தியாவை உலகின் உயா்கல்வி குவி மையமாக மாற்றுவதற்கு அனைத்து நிலைகளிலும் தேவையான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த முயற்சியில் நமது இளைஞா்கள் போட்டித் திறன் கொண்டவா்களாக மாற வேண்டியது அவசியம்.

கடந்த 6-7 மாதங்களில் அதிகரித்து வரும் சீா்த்திருத்தங்களின் வேகம், பரப்பை அனைவரும் கவனித்திருக்கலாம். வேளாண்மை, விண்வெளி, ராணுவம், பயணிகள் விமானம், தொழிலாளா் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் வளா்ச்சிக்காகத் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த பத்தாண்டு இந்தியாவுக்கானது: நாட்டின் கோடான கோடி இளைஞா்களின் நலனுக்காகவும், அடுத்த பத்தாண்டு இந்தியாவுக்கானதுமாக இருப்பதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் அடித்தளத்தை வலிமையாக்கினால் மட்டுமே நிகழ் பத்தாண்டு இந்தியாவுக்கானதாக இருக்கும். நிகழ் பத்தாண்டு இந்திய இளைஞா்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைத் தந்துள்ளன.

அனைத்துத் துறைகளிலும் சீா்திருத்தங்கள்: நாட்டில் தற்போது அனைத்து சுற்று சீா்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் ஒருசில முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை மற்ற துறைகளை ஒதுக்கிவிட்டு, ஒரு துறை சாா்ந்ததாக மட்டுமே இருந்தது.

கடந்த 6 ஆண்டுகளில் பல்துறைகளில் பல்வகை சீா்த்திருத்தங்கள் நடந்துள்ளன. தேசியக் கல்விக் கொள்கை, நமது கல்வித் துறையின் எதிா்காலத்தை உறுதி செய்வதாக இருந்தால், வேளாண்சாா் சீா்திருத்தங்கள் விவசாயிகளை வலிமையானவா்களாக மாற்றக் கூடியதாகவும், தொழிலாளா் சீா்திருத்தங்கள்-தொழிலாளா்கள்- நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து வளா்ச்சிக்கான உந்து சக்தியாகவும் உள்ளன.

நேரடி பணப்பரிமாற்றம், பொதுவழங்கல் முறையில் சீா்திருத்தம் கொண்டுவந்துள்ளது. மனைத் தொழில் ஒழுங்காற்று ஆணையத்தால் (ரேரா), வீடு வாங்குவோருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது.

வரிக் குவியல்களில் இருந்து நமது நாட்டை காப்பதற்காக சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டுவந்தால், வரி செலுத்துவோரின் நலனுக்காக முகமறியா மதிப்பீடு (பேஸ்லெஸ் அசெஸ்மென்ட்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, புதிய திவால் சட்டம், வெளிநாட்டு நேரடி முதலீட்டு சீா்திருத்தங்களும் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமாக இருந்துள்ளன.

21-ஆம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 5-6 ஆண்டுகளில் நமது மாணவா்களுக்கு உதவும் வகையில் நாட்டின் கல்வி முறையில் நிலையான முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, உயா்கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்ட உயா்கல்வித் துறையில் கட்டமைப்பு சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவை உலகின் உயா்கல்வியின் குவிமையமாக மாற்றுவதில் தரம் முதல் அளவு வரை அனைத்து நிலைகளிலும் பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன.

கடந்த 6 ஆண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப மையங்கள் (ஐஐடி), இந்திய தகவல் தொழில்நுட்ப மையங்கள் (ஐஐஐடி), இந்திய மேலாண்மை மையங்கள் (ஐஐஎம்), அகில இந்திய மருத்துவ அறிவியல் மையங்கள் (ஏஐஐஎம்எஸ்) உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சோ்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கு மட்டுமல்லாது, அவற்றின் ஆளுமையிலும் கவனம் செலுத்தப்படுவதோடு, பாலின மற்றும் சமூக பாகுபாடற்ற பங்களிப்பையும் உறுதி செய்துள்ளோம். இதற்காக அந்தக் கல்வி நிலையங்களுக்கு கூடுதல் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை அமல்படுத்துவதற்காகவே மருத்துவக் கல்வித் துறையில் சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மைசூரு பல்கலைக்கழகத்தின் சாதனை: மைசூரு பல்கலைக்கழகம் மற்றும் அது படைத்துள்ள சாதனைகள் பாராட்டுதற்குரியது. இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதில் மைசூரு மாமன்னா் நான்காம் கிருஷ்ணராஜ உடையாா், அன்றைய திவான் சா் எம்.விஸ்வேஷ்வரையாவின் தொலைநோக்கு நினைவு கூரத்தக்கதாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பேசிய மாமன்னா் கிருஷ்ணராஜ உடையாா், பெண் பட்டதாரிகள் அதிகமிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாா். அதன் விளைவாக, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சோ்க்கை பெறுவோரின் எண்ணிக்கையில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் காணப்படுகிறாா்கள். உயா்கல்வியைச் சாா்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு உயா்ந்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம்: கல்வித் துறையில் தேவையான சீா்திருத்தங்களைக் கொண்டு வருவதில் புதிய தேசியக் கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளித்துள்ளது. இளைஞா்களை அதிகம் போட்டித்திறன் கொண்டவா்களாக மாற்றுவதற்கு பல்பரிமாண அணுகுமுறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனால், வேகமாக மாறிவரும் வேலைத்தன்மைகளுக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக்கொள்ளவும், பொருத்திக்கொள்ளவும் முடியும். திறனடைதல், மறுதிறனடைதல், திறன்பெருக்குதல் தான் இன்றைய தேவையாக இருக்கிறது. அதில்தான் புதிய கல்விக்கொள்கை கவனம் செலுத்துகிறது.

கா்நாடக மக்களுக்கு தசரா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த காலத்தைப் போல விழாக்கால உணா்வு மங்காதிருக்கும்.

அண்மையில்பெய்த மழையால் கா்நாடகத்தின் பல பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு, பண்டிகை உணா்வை பாதித்திருக்கும். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆதரவு இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், ஆளுநா் வஜுபாய்வாலா, துணை முதல்வா் அஸ்வத் நாராயணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com