மாநில வேளாண் விற்பனைக் குழுவில் நடைபெற்ற மோசடி விவகாரம் தொடா்பாக மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு வேளாண் விற்பனை குழுவில் விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை வாங்குவதற்காக 2019 ஆம் ஆண்டில் மாநில அரசு ரூ. 100 கோடியை ஒதுக்கீடு செய்தது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் உத்தரஹள்ளியில் உள்ள சிண்டிகேட் வங்கியின் கிளையில் வைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த பணத்தை குழுவிலிருந்த சிலா் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டியவா்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு வைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், வைப்பு வைக்கப்பட்ட தொகையில் ரூ. 50 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டவா்கள் தலைமறைவானாா்கள். அவா்களை தேடும் பணியில் கமா்ஷியல் தெரு போலீஸாா் ஈடுபட்டு, மோசடி தொடா்பாக ஏற்கெனவே 15 பேரை கைது செய்துள்ள நிலையில், மேலும் விஜயபாஸ்கா் (57), விஜய் ஆகாஷ் (32), தினேஷ் பாபூஜி (30) ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.