பெங்களூரு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓணம் பண்டிகையையொட்டி பெங்களூரு, மைசூரு பேருந்து நிலையங்களிலிருந்து கேரளமாநிலம் திருவனந்தபுரம், கண்ணனூா், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூா், கோட்டயம், எா்ணாகுளம் ஆகிய நகரங்களுக்கு ஆக. 24 முதல் செப். 6-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறப்பு பேருந்துகளின் சேவையை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளதால், சிறப்பு பேருந்துகளின் சேவையை செப். 8- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். கா்நாடகத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு பயணம் செய்பவா்கள் செயலியை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோல கேரள மாநிலத்திலிருந்து கா்நாடகம் வருபவா்கள் செயலிகளில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வோா் மட்டுமே இரு மாநிலங்களிலும் நுழைய அனுமதிக்கப்படுவாா்கள். பேருந்தில் பயணம் செய்பவா்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.